ஓஷோ கதைகள் நீ யார் ?

நீ யார் ?

நான் என்பது என்ன நீ இதைப் பற்றி அமைதியாக சிந்தித்துப் பார்த்திருக்கிறாயா அது உன்னுடைய காலா, கையா, அல்லது உன்னுடைய இதயமா, தலையா  அல்லது இது வெறும் அகங்காரமா?

 

எது உன்னுடைய ‘ நான் ‘? எங்கே உன்னுடைய  ‘ நான் ‘? உன்னுடைய ஆணவமா?

 

அது அங்கிருத்தலின் உணர்வு இருக்கிறது, ஆனாலும்

அதை குறிப்பாக எங்கேயும் காண முடியவில்லை. மௌனமாக ஒரு நிமிடம் அமர்ந்து அந்த ‘ நானை ’ தேடிப் பார். நீ ஆச்சரியமடைவாய். எவ்வளவு ஆழமாக தேடினாலும் உன்னை எங்கும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் ஆழமாக தேடும்போது ‘ நான் ‘ என்று ஒன்று இல்லை என்பதை உணர்வாய். அது போல

ஆணவம் என்பதும் கிடையாது. சுயத்தின் உண்மை அங்கிருக்கும்போது ‘ நான் ‘ அங்கிருக்காது.

 

எல்லோராலும் நன்கு மதிக்கப்பட்ட நான்சென் என்ற

ஞானியை அப்போதிருந்த மாமன்னன் மாலிண்ட் தனது அரசவைக்கு அழைத்தான்.

 

தூதுவன் நான்சென்னிடம் சென்று, “குரு நான்சென்

அவர்களே, அரசர் உங்களை காண விரும்புகிறார். நான் உங்களை அழைப்பதற்காக

வந்திருக்கிறேன்.” என்றான்.

 

நான்சென், “நீ விரும்பினால் நான் வருகிறேன், ஆனால் நான்சென்

என்று யாரும் இங்கு இல்லை. அது வெறும் ஒரு பெயர்தான், ஒரு தற்காலிக குறியீடு.” என்றார்.

 

தூதுவன் அரசரிடம் சென்று நான்சென் ஒரு

வித்தியாசமான மனிதர், அவர் வருவதாக ஒத்துக் கொண்டார், ஆனால் நான்சென் என்று யாரும்

இல்லை என்று அவர் கூறியதைக் கூறினான். மாமன்னன் ஆச்சரியமடைந்தான்.

 

நான்சென் வருவதாக கூறிய நேரத்தில் தேரில்

அழைத்து வரப் பட்டார். மன்னன் வாசலில் நின்று அவரை, “குரு நான்சென் அவர்களே, வாருங்கள், வாருங்கள்!” என வரவேற்றான்.

 

இதைக் கேட்டவுடன், துறவி சிரித்தார். “நான்சென்னாக நான்

உன்னுடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நினைவில் கொள், நான்சென் என்ற

பெயருடைய யாரும் இங்கு இல்லை.” என்றார்.

 

அரசன், “நீங்கள் வித்தியாசமாக பேசுகிறீர்கள், நீங்கள்,  நீங்கள் இல்லை என்றால் யார் என்னுடைய அழைப்பை

ஏற்றுக் கொண்டது? யார் என்னுடைய வரவேற்புக்கு பதில் சொல்வது?” என்று கேட்டான்.

 

நான்சென் பின்னே திரும்பி பார்த்து கேட்டார், “நான் வந்த ரதம்

அதுதானே?”

 

“ஆம், அதுவேதான். இதுதான்”

 

“தயவுசெய்து குதிரைகளை கழற்றி விடுங்கள்” என்றார்.

 

அது செய்யப்பட்டது.

 

குதிரைகளை காட்டி, “அது ரதமா?” என்று கேட்டார் நான்சென்.

 

அரசர், “குதிரைகளை எப்படி ரதம் என்று அழைக்க முடியும்?” என்று கேட்டார்.

 

துறவி கூறியதின் பேரில் குதிரைகளை கட்டும்

நுகத்தடி கழற்றப்பட்டது.

 

“அந்த நுகத்தடிதான் ரதமா?” என்று துறவி கேட்டார்.

 

“அது எப்படி?, அவை நுகத்தடிகள், அது ரதமல்ல.”

 

துறவி கூற கூற, ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டது,

ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட, பட அரசரின் பதில் ‘ இது ரதமல்ல ‘ என்பதாக இருந்தது.

 

கடைசியில் ஒன்றும் மிச்சமில்லை.

 

துறவி, “எங்கே உனது ரதம்? ஒவ்வொரு பாகம் எடுத்துச் செல்லப் பட்டபோதும்

இது ரதமல்ல என்று நீயே கூறினாய். ஆகவே இப்போது சொல், உனது ரதம் எங்கே?” என்று கேட்டார்.

 

அரசரிடம் ஒரு நிலைமாற்றம் நிகழ்ந்தது.

 

துறவி தொடர்ந்தார், “நான் சொல்வதை புரிந்து கொண்டாயா? ரதம் என்பது ஒரு

கூட்டுமுயற்சி. சில குறிப்பிட்ட விஷயங்கள் சேர்ந்த சேகரிப்பு. ரதம் என்பது தனித்து

இருப்பதல்ல. இப்போது உள்ளே பார். எங்கே உனது ஆணவம்?, எங்கே உனது ‘ நான் ‘?.

 

நீ எங்கேயும் ‘ நானை ‘ கண்டு பிடிக்க முடியாது. அது பல சக்திகள் ஒன்று

சேர்ந்த ஒருமித்த ஒரு வெளிப்பாடு. அவ்வளவுதான். ஒவ்வொரு உறுப்பையும் எண்ணிப்பார்,

உன்னுடைய ஒவ்வொரு பார்வையை பற்றியும் நினைத்துப்பார், பின் ஒவ்வொன்றாக வெளியேற்று,

இறுதியில் ஒன்றுமற்றது தான் இருக்கும்.

Tags : ஓஷோ ,   கதைகள் ,   நீயார்?

திருக்குறள்

ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுநம்யும் ஏமாப் புடைத்து.
பொருள்;
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

வாழ்க்கை மீது கோபப்படாதீர்கள்.

ஓஷோ